ராமநாதபுரம் : "அயோத்தி தீர்ப்பை வைத்து முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்,' என, தமிழக தவ்ஹித் ஜமாத் மாநில துணைத்தலைவர் ரஹ்மத்துல்லா தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: முஸ்லிம்களின் பாரம்பரிய பாபர் மசூதி, சிலரால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு, நாளை அறிவிக்கப்பட உள்ளது. இதில் பாதகமான தீர்ப்பு வந்தால், முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். இருப்பின் எங்களின் எதிர்ப்புகளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மூலம் தெரிவிப்போம்.நீதியின் படி மேல்முறையீடு செய்வோம். இதற்கிடையில் தீர்ப்பு குறித்து அச்சுறுத்தலை வெளியிடும், வி.எச்.பி., உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக டி.ஜி.பி.,யிடம் மனு அளித்துள்ளோம், என்றார். மாவட்ட தலைவர் சைபுல்லா, மாவட்ட செயலாளர் ஆரிப்கான், பொருளாளர் மாலிக் உடனிருந்தனர்.